tamilnadu

img

மனநலம் காப்போம் வாருங்கள்...

மனச்சிதைவு நோய் என்பது தீவிர மனநோய்களில் ஒன்றாகும். உலகில்2.6 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பொதுவாக நூற்றில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. மனச்சிதைவு நோய் ஏற்பட இதுதான் காரணம் என்று உறுதியாக எதையும் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம். எனினும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் காரணமாக அமையலாம். இதன் காரணங்கள் உடலியல் உளவியல், சமூகவியல் என மூன்று வகையாக பிரிக்கலாம். படிப்பில் வேலையில் கவனமும், திறமை குறைதல், இரவில் சரிவர தூக்க மின்மை, பசியின்மை, அடிக்கடி காரணமில்லாமல் கூட கோபப்படுதல், சம்மந்தம் இல்லாமல் எரிச்சல் வருதல் மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையை விரும்புதல், நடத்தையில் மாறுபாடு ஆகிவை மனச்சிதைவு நோயின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்.

நோயால் தாக்கப்பட்டவரின் நடவடிக்கைகள் முந்தய இயல்பிலிருந்து வித்தியாசமாகவும் மாறியிருக்கும், தன்னை சுற்றி நடப்பவை பற்றியும், தன் நோய் பற்றிய உணர்வும் இருக்காது. இவர்கள் தேவையில்லாமலும் தேவைக்கதிகமாகவும் தொடர்பில்லாமலும் பேசுவார்கள். இவர்களது பேச்சு நமக்கு சரிவர புரியாது. இதிலிருந்து இவர்களின் சிந்தனையில் கோளாறு இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேவைக்கதிகமாக அல்லது பொருத்தமற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். சில சமயம் எந்த வித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். யாருமே அருகில் இல்லாத போதும் யாரோ பேசுகின்ற குரல் கேட்பதாக கூறுவர். அதேபோல் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாத உருவங்கள் தெரிவதாக கூறலாம்.

அந்த சமயங்களில் இவர்கள் எதாவது பதில் சொல்லும் போது தனக்கு தானே பேசுவதுபோல் தோன்றும். இந்த புலன் மாறாட்டம் மனச்சிதைவு நோயின் முக்கியமான மாறுதல் ஆகும்.  கற்பனை எண்ணங்கள் மூலம் தன்னை சுற்றி இருப்பவர்கள் தனக்கு எதிராக சதி செய்யதிட்டமிடுவதாக சந்தேகப்படுவர். இதுபோன்ற நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று அந்த நபரை மனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மனநோய் இருப்பது உறுதி படுத்தப்பட்டால் அவருக்கு தகுந்த சிகிச்சைகள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். மனச்சிதைவு நோயால் ஏற்படும் மாறுதல்களையும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்த மாத்திரைகள் உள்ளன. இம்மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும். மருத்துவரின் உரிய ஆலோசனைகள் இல்லாமல் மருந்து சாப்பிடுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது இம்மாத்திரைகள் நோயாளிகளுக்கு மீண்டும் நோய்வராமல் காக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டவரின் சிந்தனை தொடர்பு முறைகளில் மாற்றம் ஏற்படுமேயானால் அவருடைய படிப்போ, பயிற்சியோ, வேலையோ பாதிக்கப்பட்டிருக்கும். எனவே அவர்களுக்கு உளவியல் சிகிச்சை தொடர்பு முறை பயிற்சி அளிக்க வேண்டும். இப்பயிற்சிகளின் நோக்கம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதற்காகும். 

இது குறித்து மனச்சிதைவு நோய்க்குட்டவர்களை அரவனைத்து வரும் சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மனநல சிகிச்சையில் மறுவாழ்வு ஒரு முக்கிய பகுதியாகும். இயல்பு நிலையிலிருந்து மாறிய நபரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து சமூகத்திலும் குடும்பத்திலும் இயங்க வழி வகுப்பதே மறுவாழ்வு ஆகும். மறுவாழ்வு திட்டம் குறித்த ஆலோசனை, சமூகத்திறன் பயிற்சி, வேலைத்திறன் பயிற்சி, தொழிற்பயிற்சி, தொடர்புத்திறன்பயிற்சி ஆகியவற்றை கொண்டதாக இருக்க வேண்டும். அதோடு மீண்டும் நோய் தாக்காமல் இருக்க மருந்தும் மறுவாழ்வும் அவசியம் தேவையாகும். சிலருக்கு முற்றிலும் நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட அவர்களையும் சமுதாயத்தில் சக மனிதர்களாக நடமாட வைப்பதுதான் மறுவாழ்வு திட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். எனவே மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. உடல் நலத்தை பராமரிப்பதை போல மனநலத்தையும் நாம் ஒவ்வொருவரும் சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மனச்சிதைவு நோய் உள்ளிட்ட இன்னும் பல நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.